பிரபுபாதர் 125, நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
செப்டம்பர் 1, 2021, புதுடில்லி: இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் இவ்வுலகில் தோன்றியதன் 125ஆவது வருடத்தைச் சிறப்பிக்கும் வண்ணம், மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொளி மூலமாக ரூபாய் 125 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்டார். 60 நாடுகளிலிருந்து 600 இடங்களைச் சார்ந்த பக்தர்கள் காணொளியில் நேரடியாக கலந்துகொள்ள, மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலைத்தளத்தில் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். அவர்களிடையே பேசிய பிரதமர், பகவான் கிருஷ்ணர் கீதையில் வழங்கியுள்ள உபதேசங்களையும் பாரத பாரம்பரியத்தையும் உலக மக்களுக்குக் கொண்டு சென்றதில் ஸ்ரீல பிரபுபாதரின் தளராத திருப்பணியினைப் போற்றினார். ஸ்ரீல பிரபுபாதர் எவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு 1966இல் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிலைநாட்டினார் என்பதையும், அதன் பின்னர் எவ்வாறு உலகெங்கிலும் கோயில்களை நிறுவினார் என்பதையும் நினைவுகூர்ந்தார். வெளிநாட்டினரும் “ஹரே கிருஷ்ண” என்று சொல்லும்போது, அதைக் கேட்க மிகவும் பெருமையாக உள்ளது என்றார். பண்பாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் திரு G. கிஷன் ரெட்டி அவர்களும், இந்தியாவின் இஸ்கான் தலைவரான தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜர் அவர்களும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பின என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆன்மீகத் தூதரான ஸ்ரீல பிரபுபாதரின் பெருமைகளை மனதில் நிறுத்தி கொண்டாடுவதற்கு மிகவும் உகந்த இந்த தருணத்தில், வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் திட்டமிடப்பட்டுள்ளன.