முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
ஸ்ரீல பிரபுபாதர்

அனைத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்

A.C Bhaktivedanta Swami Prabhupada · 2 நவம்பர், 2016 · ⏱️ 4 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

அனைத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்

பக்தர்**:** ஸ்ரீல பிரபுபாதரே, கிருஷ்ண உணர்வில் இல்லாத நிலையே பௌதிக நிலை என்று நீங்கள் கூறியதைக் கேட்டுள்ளேன். அப்படியெனில், பௌதிகம் என்பது என்ன? ஸ்ரீல பிரபுபாதர்**:** எதுவும் பௌதிகமானதல்ல. நீங்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றமடையும்போது, உங்களுக்கு எதுவும் பௌதிகமானதில்லை. இந்த மலரை கிருஷ்ண உணர்வோடு நாம் அர்ப்பணிக்கும்போது, இது பௌதிகமாகிவிடுமா? பக்தர்**:** இல்லை. ஸ்ரீல பிரபுபாதர்**:** இஃது ஆன்மீகமாக எவ்வாறு மாறியது? மரத்திலிருக்கும்போது இது பௌதிகமாக இருந்தது, தற்போது ஆன்மீகமானதா? இல்லை. இஃது ஆன்மீகமானதே. இதனை நான் என்னுடைய புலனின்பத்திற்காக நினைக்கும்போது, இது பௌதிகமாகிறது. இதனை கிருஷ்ணரின் இன்பத்திற்காக நாம் பறிக்கும்போது ஆன்மீகமயமாகிறது. பக்தர்**:** அப்படியெனில் இந்த முழுவுலகமும் ஆன்மீகமயமாகுமா? ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். நாம் அதையே விரும்புகிறோம். அனைத்தையும் கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்தும்போது இந்த உலகமே ஆன்மீக உலகமாகும். பக்தர்**:** அப்படியெனில், நாம் கிருஷ்ணரின் எல்லா படைப்புகளையும் புகழலாம். இம்மலர் கிருஷ்ணருடைய படைப்பு என்பதால், இது மிகவும் அழகாக உள்ளது என்று கூறலாமா? ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். நாம் இதையே உணர்கிறோம். மாயாவாதிகள், ஜகன் மித்யா, “இந்த உலகம் ஒரு பொய்யான தோற்றம்” என்று கூறுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறு சொல்வதில்லை. கிருஷ்ணர் அவருடைய ஆனந்தத்திற்காக பலவிதமான வஸ்துக்களைப் படைத்திருக்கின்றார். நான் அவற்றை பொய்யான தோற்றம் (மித்யா) என்று ஏன் கூற வேண்டும்? நீங்கள் ஒரு நல்ல வீட்டைக் கட்டி எனக்கு அழைப்பு விடுக்கும்போது, நான் அதனை ஒரு பொய்யான தோற்றம் என்று கூறினால்… பக்தர்**:** நான் மனவருத்தத்திற்கு உள்ளாவேன். ஏனெனில், அஃது ஒரு பொய் தோற்றமாக இருந்தால், என்னால் அதனை அனுபவிக்க இயலாது. ஸ்ரீல பிரபுபாதர்**:** (புன்னகைத்தபடி) எவ்வளவு மனவருத்தத்திற்கு உள்ளாவாய்? எல்லாம் பொய் தோற்றம் என்பது அசுரர்களின் கூற்று என்று பகவத் கீதை விளக்குகின்றது. அஸத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகத் ஆஹுர் அனீஷ்வரம். அயோக்கியர்களான அசுரர்கள் இவ்வுலகை பொய் என்று உரைக்கின்றனர். இதற்கு காரணமோ கட்டுப்பாட்டாளர்களோ இல்லை என்கிறார்கள். இவை அசுரர்களுக்கான வரையறை. ஆனால் கிருஷ்ணர் ஸத்யம் (உண்மை) என்பதால், அவரது படைப்புகளும் ஸத்யமாகவே இருக்க வேண்டும், அவரது ஆற்றல்களும் ஸத்யமாகவே இருக்க வேண்டும். ஏன் இதை பொய் என்று சொல்ல வேண்டும்? நாங்கள் இவ்வாறு போதிப்பதில்லை. மாயாவாதிகளே இவ்வாறு போதிக்கின்றனர். பக்தர்**:** ஒருவர் கிருஷ்ணரின் சிலைகளைக் காணும்போது கல்லாக அல்லது மரமாகக் காண்கிறார். அஃது அவருக்கு பௌதிகமாகத் தோன்றும். ஸ்ரீல பிரபுபாதர்**:** அஃது அவருடைய அறியாமை. எப்படி அது பௌதிகமாகும்? அந்த கல்லும் கிருஷ்ணரின் சக்தியாயிற்றே. உதாரணமாக மின்சாரம் எங்கும் உள்ளது. மின்சாரத்தைப் பற்றிய அறிவுடையவர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பார். அதுபோலவே, கிருஷ்ணர் எங்கும் வீற்றுள்ளார், அவர் கல்லிலும்கூட வீற்றுள்ளார். பக்தர்கள் மட்டுமே இந்த கல்லைக்கூட கிருஷ்ணரின் புகழைப் பரப்புவதற்காக பயன்படுத்துகிறார்கள். அயோக்கியர்களுக்கு இவை தெரிவதில்லை. கிருஷ்ணரைத் தவிர வேறு நோக்கமில்லாத காரணத்தால், பக்தர்களுக்கு இவை தெரிகின்றன. கிருஷ்ணர் ஏன் கல்லிலும் இருக்கக் கூடாது? இதில் கிருஷ்ணர் உள்ளார். மாயாவாதிகள் அருவவாதத்தை போதிக்கின்றனர், ஆனால் வேற்றுமையைக் காண்கின்றனர். இது கல் என்றும், இதில் கிருஷ்ணர் இல்லை என்றும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். எல்லாம் ஒன்றுதான் என்றால், ஏன் வேற்றுமையைக் கொண்டு வருகிறீர்கள்? பக்தர்**:** கிருஷ்ண உணர்வுடைய நபர்கள், கிருஷ்ணர் கல்லில் இருப்பது போலவே விக்ரஹத்திலும் இருக்கிறார் என்று எண்ணுவார்களா? ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். பக்தர்**:** அதில் உள்ளவாறே? ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். ஏன் இருக்கக் கூடாது. பக்தர்**:** ஆனால், நாம் விக்ரஹங்களை இந்தியாவிலிருந்து செய்து பெறுகின்றோம். ஸ்ரீல பிரபுபாதர்**:** கிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை.” இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்—ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட தத்துவம். அனைத்தும் கிருஷ்ணரே, ஆனால் நீங்கள் இந்த மேஜையை கிருஷ்ணராக வழிபடக் கூடாது. அவ்வாறு வழிபடுதல் அயோக்கியத்தனம். இந்த சூரிய ஒளியும் ஒருவிதத்தில் சூரியனே, அப்படித்தானே? அதே சமயத்தில் சூரிய ஒளி உங்கள் அறையில் இருந்தால், சூரியனே இருக்கிறது என்று கூற இயலாது. இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும். பக்தர்**:** ஆனால், நீங்கள் கிருஷ்ணரைக் கல்லிலும் காணலாம் என்கிறீர்கள். ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். ஏன் காணக் கூடாது? பக்தர்**:** கல்லினுள் உள்ள கிருஷ்ணரை நாம் வழிபடலாம் அல்லவா? ஸ்ரீல பிரபுபாதர்**:** ஆம். நாங்கள் அனைத்தையும் வழிபடுவோம். நாங்கள் கிருஷ்ணரை எங்கும் காண்கிறோம். நாங்கள் இந்த மரத்தை கிருஷ்ணரின் சக்தியாகக் காண்கிறோம். ஆதலால், இந்த மரமும் வழிபாட்டிற்குரியது; ஏனெனில், கிருஷ்ணரும் கிருஷ்ணருடைய சக்தியும் வழிபடத்தக்கதே. எனவே, நாம் “ஹரே கிருஷ்ண” என்கிறோம். ஹரே என்பது கிருஷ்ணரின் சக்தியைக் குறிக்கும். நாங்கள் அனைத்தையும் வழிபடுகிறோம், எங்களுடைய குழந்தைப் பருவத்தில் ஒரே ஒரு நெல் மணி தவறி விழுந்தால்கூட, அதனை உடனே எடுத்து சிரமேற் கொண்டு அதற்கு மரியாதையளிக்க பயிற்றுவிக்கப்பட்டோம். கிருஷ்ணருடன் எவ்வாறு அனைத்தையும் தொடர்புபடுத்திக் காண்பது என்பதை எங்களுக்கு ஆன்றோர்கள் பயிற்றுவித்தார்கள். இதுவே கிருஷ்ண உணர்வாகும். எனவே, நாங்கள் எதையும் உபயோகமற்றதாக, தவறாக பயன்படுத்த என்றும் விருப்பம் கொண்டதில்லை. நாம் ஏன் பிரச்சாரம் செய்கின்றோம்? ஏனெனில், பல மூடர்கள் வாழ்க்கையை தவறாக பயன்படுத்துவதை நாம் காண்கின்றோம். சில அறிவுரைகளை தந்து அவர்களை மேம்படுத்த விரும்புகிறோம். இதுவே நமது இயக்கத்தின் கொள்கையாகும். “இவர்கள் நரகத்திற்குச் செல்லட்டும்,” என்று நாம் நினைத்திருக்கலாம். மாயாவாதிகள் சமாதி நிலையை அடைவதற்காக இமயம் செல்கின்றனர். ஆனால், நாம் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்திற்கு வந்திருக்கின்றோம். ஏன்? “அந்தோ!! இந்த மக்கள் மாயையால் பீடிக்கப்பட்டு துன்பப்படுகின்றனரே, சில நல்ல அறிவுரைகளையாவது இவர்கள் பெறட்டும்,” என்பதே நமது இயக்கத்தின் கொள்கையாகும். நாங்கள் அனைத்தையும் எவ்வாறு கிருஷ்ணருக்காக பயன்படுத்துவது என்பதையும் எவ்வாறு கிருஷ்ணர் அனைத்திலும் உள்ளார் என்பதையும் பயிற்றுவிக்கின்றோம். கிருஷ்ணரை அனைத்திலும் காண்பதே நமது இயக்கம். கிருஷ்ணர் கூறுகின்றார், “யாரொருவர் என்னை எங்கும் காண்கின்றாரோ அனைத்தையும் என்னில் காண்கின்றாரோ, அவரே பக்குவமான நபர்.” https://media.tamilbtg.com/uploads/2016/11/1-29.jpg

புதுப்பிக்கப்பட்டது: 9 ஜனவரி, 2017

← முந்தைய கட்டுரை இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்ததற்கான காரணம் அடுத்த கட்டுரை → ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

← முகப்பு