முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
பகவத் கீதை

பகவத் கீதை பூஜைக்கா?

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2023 · ⏱️ 2 நிமிட வாசிப்பு

எழுத்து அளவு

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால், உண்மையான குரு சீடப் பரம்பரையின் வழியாகப் பெறப்பட்ட “பகவத் கீதை உண்மையுருவில்” நூலை வாங்க நேரிடுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய இந்த மாபெரும் பொக்கிஷத்தை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? நம்மிடையே எவ்வளவு முக்கியமான சொத்து இருந்தாலும், அதனை நாம் பயன்படுத்தாவிடில், என்ன பயன்? பகவத் கீதை உண்மையுருவில் நூலை வாங்கிய பின்னரும், வீட்டின் அலமாரியில் அதனை அப்படியே உள்ளது உள்ளபடி வைத்திருந்தால் என்ன பயன்? சிலர் இதைத்தான் செய்கின்றனர். பகவத் கீதை அறிவின் பொக்கிஷம். இதனை நாம் தினமும் படிக்க வேண்டும். இதன் அறிவிற்கு எல்லையே இல்லை என்பதால், எத்தனை முறை படித்தாலும், இது புதுப்புது உணர்வுகளை வழங்கத்தக்கது. சரஸ்வதி பூஜையன்று அலமாரியிலிருந்து வெளியே எடுத்து, விஜய தசமியன்று சில பக்கங்களைப் படித்து விட்டு, மீண்டும் வருடம் முழுவதும் அலமாரியில் வைத்துவிடக் கூடாது. அல்லது பூஜை அறையிலேயே எப்போதும் வைத்துக் கொண்டு, தினமும் பூஜை செய்து, படிக்காமல் இருந்துவிடக் கூடாது. நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ குப்பைகளை மனதில் சேர்த்துக் கொண்டுள்ளோம். நாம் பார்ப்பவை, கேட்பவை, படிப்பவை, என எல்லாம் பெரும்பாலும் குப்பைகளே, இந்தக் குப்பைகளைக் களைய தினமும் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும். குப்பைகளை தினமும் களையாவிடில், விரைவில் அது குப்பை மண்டியாகி, தூய்மைக்கு வாய்ப்பில்லாததாகி விடும். அதுபோலவே, மனதில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். அதற்கு நாம் தினமும் பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிக்க வேண்டும், அல்லது பிரபுபாதரின் மற்ற நூல்களையும் படிக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 40 பக்கம் படித்தால் மட்டுமே பௌதிகக் கடலில் மூழ்காமல் மிதக்க முடியும். இக்கடலிலிருந்து தப்பித்து ஆன்மீக உலகை நோக்கி முன்னேற வேண்டுமெனில், மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதர் இந்த நூல்களை அல்லும்பகலும் பாடுபட்டு நம்முடைய நன்மைக்காக வழங்கியுள்ளார். தினமும் ஒரு மணி நேரமாவது செலவிட்டு, பிரபுபாதர் வழங்கியுள்ள அமிர்தத்தைப் பருகுவோம், ஆழமாகப் படிப்போம், அவரது மிகப்பெரிய தியாகத்திற்கு மதிப்பளிப்போம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்… Subscribe Digital Version

புதுப்பிக்கப்பட்டது: 12 டிசம்பர், 2024

← முகப்பு